கோவை 7 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரம்

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கி வரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின்
 

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கி வரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அவர்களும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவு 1 மணி வரை குழந்தையை தேடிப் பார்த்துவிட்டு, கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், சிறுமியின் வீடு அருகே இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள சந்தில் மறுநாள் காலை 5.30 மணியளவில் சிறுமியின் உடல் காயங்களுடன் டி-சர்ட் மூலம் சுற்றிவைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்தது. பதறிப்போய் அலறியடித்து அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

பின்னர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

அந்த சிறுமியின் உடலில் உதடு மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இதனால் அந்த சிறுமி கடத்தப்பட்டு, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும், சிறுமியின் சாவுக்கு நீதிகிடைக்க வேண்டும், என்று கூறி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்ட தகவலும் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள், அதுவும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு குரூரமாக நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.