சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்ற திரிஷா..! இந்து அமைப்புகள் அளித்துள்ள புகாரால் சர்ச்சை

 

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது, சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை திரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க உருவாக்கி வருகிறார்.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஹரிகேஷ்வர் பகுதியில் உள்ள நர்மதை நதிக்கரையில் திரிஷா படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது, படகில் இருந்து இறங்கிய திரிஷா கரையில் உள்ள சிவாலயத்தில் நந்தி- சிவலிங்கம் இடையே காலணியுடன் நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை திரிஷா மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.