பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் காலமானார்

 

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3-ம் தேதி மும்பை உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த செய்தி அறிந்ததும், லண்டனில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அக்‌ஷய் குமார், உடனடியாக மும்பை புறப்பட்டார். பின்னர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இன்று காலை தனது தாயார், அமைதியான முறையில் உலகை விட்டு நீங்கி தனது தந்தையுடன் இணைந்து விட்டார் என்றும் அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தாயாரின் உடலுக்கு இந்தி திரைப் பிரபலங்கள் ரோகித் ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சாஜித் கான் உள்ளிட்ட பலர்  நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் அக்‌ஷ்ய் குமாரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.