‘சுந்தரா டிராவல்ஸ்’ 2ம் பாகம உருவாகிறது..?

 

முரளி, வடிவேலு நடித்து வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அதன்படி ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர்.சி.யின் அரண்மனை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது.

அந்த வரிசையில், அசோகன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் முரளி, வடிவேலு, ராதா, வினுசக்கரவர்த்தி, மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஒரு பழைய பஸ்ஸை வைத்து தான் முழு படமும் எடுக்கப்பட்டிருந்தது. அதிலும், இந்தப் படத்தில் வந்த எலி கூட ஒரு முக்கிய பங்கைக் கொடுத்தது.

இந்நிலையில், மாபெரும் வெற்றிப் படமான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.