ஆபாச படம் தயாரித்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் கைது!

 

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அழைத்து, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் ராஜ் குந்த்ராவுக்கு எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசில்  புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, மும்பையின் மாத் பகுதியில் உள்ள பங்களாவைக் போலீசார் சோதனை செய்து, ஐந்து பேரைக் கைது செய்தனர்.
ஆபாசப் படத்தின் இயக்குநர் என கருதப்படும் ரோவா கான், புகைப்பட கலைஞர் மோனு சர்மா, கலை இயக்குநர் பிரதிபா நலாவடே ஆகியோருடன் அரிஷ் ஷேக் மற்றும் பானு தாக்கூர் என்ற இரண்டு நடிகர்களும் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் போலீசாரிடம் இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை சில செயலிகள் வழியாக வெளியிட்டது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ராஜ் குந்த்ராவை போலீஸ் நேற்று கைது செய்தது.