யுடர்ன் விமர்சனம்
நடிகர்கள்: சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா
இசை: பூர்ணச் சந்திர தேஜஸ்வி
ஒளிப்பதிவு: நிகித் பொம்மிரெட்டி
தயாரிப்பு: பிஆர்8 கிரியேஷன்ஸ், விஒய் கம்பைன்ஸ்
இயக்கம்: பவன்குமார்
நல்ல த்ரில்லர் படத்துக்கு இலக்கணம், அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைவதுதான். அப்படி ஒரு படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்தக் குறையை ஓரளவு தீர்த்து வைக்கிறது சமந்தா நடித்துள்ள யு டர்ன்.
ஒரிஜினலாக இது கன்னடப்படம்தான். தமிழுக்கு ஏற்ற மாதிரி ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து, நேரடி தமிழ்ப் படம் என்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனாலும் படத்தை ரசி்க்க இது தடையாக இல்லை.
ஒரு பத்திரிகையாளர், பத்து கொலைகள், அதற்கான விசாரணைதான் யுடர்ன் படத்தின் கதை இழை. சமந்தாதான் அந்தப் பத்திரிகையாளர். ஒரு மேம்பாலத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றிவிட்டு யு டர்ன் போட்டுச் செல்பவர்களால் ஏற்படும் விபத்துகள் பற்றி ஒரு கட்டுரை எழுதும் முயற்சியில் இருக்கிறார் சமந்தா. அப்படி யுடர்ன் போட்டுவிட்டுச் செல்லும் ஒருவரை பின் தொடர்கிறார். ஆனால் முடியவில்லை. மறுநாள் அந்த நபர் இறந்து கிடக்கிறார். போலீசார் சமந்தாவை அழைத்து விசாரிக்கிறார்கள். அவர் விஷயத்தைச் சொல்கிறார். மேலும் ஏற்கெனவே அப்படி யு டர்ன் அடித்துச் சென்ற பத்துப்பேரின் விலாசங்களையும் தருகிறார். போய்ப் பார்த்தால் அவர்கள் அனைவருமே அடுத்தடுத்து இறந்திருப்பது தெரிய வருகிறது. விசாரணையில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் ஆதி. சமந்தாவுக்கும் அந்த இறப்புகளுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் இறந்தது ஏன்? எப்படி போன்றவற்றுக்கெல்லாம் மிக வித்தியாசமாக விடை தந்திருக்கிறார் இயக்குநர் பவன்குமார்.
மீண்டும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் சமந்தா. மிகக் கச்சிதமான நடிப்பு. அவரது பயம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பு.
ஆதிக்கு அந்த இன்ஸ்பெக்டர் ரோல் பக்காவாகப் பொருந்துகிறது. மிகப் பக்குவமாக நடித்து பாராட்டுகள் பெறுகிறார். ஆடுகளம் நரேன், பூமிகா, ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்துள்ளனர்.
வழக்கமான பேய்ப் படங்களில் இருக்கும் லாஜிக் மீறலுக்கு இந்தப் படமும் விலக்கல்ல. எது வேண்டுமானாலும் செய்ய முடியும் பேய்க்கு, சில உண்மைகள் மட்டும் எப்படி தெரியாமல் போகும்?
பல இடங்களில் வசனங்கள் நான் சிங்க்காக உள்ளன. கன்னடத்திலிருந்து படத்தை ரீமேக் செய்தவர்கள், கேரக்டர் பெயர்கள், வசனங்களைக் கூடவா மாற்றாமல் விடுவார்கள்?
படத்துக்கு பெரும் பலம் எடிட்டிங்கும், ஒளிப்பதிவும். இசை சுமார்தான்.
இவற்றையெல்லாம் தாண்டி படத்தை ரசிக்க வைக்கிறது விறுவிறுப்பான திரைக்கதை. அந்த வகையில் ஜெயித்துவிடுகிறார் லூசியா புகழ் பவன் குமார்.