விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானது தான் - நடிகை சுவாசிகா

 

விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானது தான் என்று நடிகை சுவாசிகா கூறியுள்ளார்.

தமிழில் 'கோரிப்பாளையம்', 'மைதானம்', 'சாட்டை', 'சோக்காலி', 'அப்புச்சி கிராமம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவாசிகா. இவர், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் அதிகம் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை சுவாசிகா ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள், சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்பம் போன்ற பல காரணங்களால் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர்.

நான் திருமணம் செய்துகொள்ளும் போது பிரச்னைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்த வரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன்.

மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வது பயங்கரமானது. இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழ திருமணம் செய்து கொள்கின்றனர்.

தாங்கமுடியாத பிரச்னைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது உயிர்களை மாய்க்காத ஒரு வழியாகும். விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானது தான். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பையும் வழங்குகிறது. பெண்கள் தங்களை மோசமாக நடத்த திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்னைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.