அறுவை சிகிச்சைக்கு பிறகு நடிகை ரோஜா..? வைரலாகும் புகைப்படம்

 

நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் கட்டி இருந்ததால் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரோஜா, 90-களில் இளைஞர்களின் இதையத்தை கொள்ளையடித்த முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி, அவர் நடித்த உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா உள்பட பல படங்கள் வெற்றியை அள்ளி தந்தன.

கதாநாயகியாக நடித்த காலங்கள் மாற நடிகை ரோஜா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து அரசியலில் பயணித்த ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் கட்டி இருந்ததால் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கர்ப்ப பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “ரோஜாவுக்கு இரண்டு ஆபரேசன்கள் நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது. தேர்தல் மற்றும் கொரோனா காரணங்களால் நடக்கவில்லை. தாமதம் ஏற்பட்டதால் பிரச்சினையாகி விட்டது. இப்போது பெரிய அளவில் ஆபரேசன் நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் நல்லபடியாக ஆபரேசன் முடிந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

சிகிச்சைக்கு பிறகு ரோஜா பூரண குணமடைந்து உள்ளார். ஒருவாரம் ஓய்வில் இருந்த அவர், தற்போது தனது மகள் அன்சுமாலிகாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அன்சு மாலிகா விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.