ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி!

 

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கெராஷ்க் மாவட்டத்தில் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் நேற்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கத்ரதுல்லா கூறுகையில், பைக் ஒன்றின் மீது பயணிகள் சென்ற பேருந்து ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. அதன் பின்னர் அந்த பேருந்து எதிர் திசையில் சென்ற எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது என கூறியுள்ளார்.

விபத்தில், பைக்கில் இருந்த 2 பேர், லாரியில் இருந்த 3 பேர் மற்றும் பேருந்தில் பயணித்த 16 பேர் என மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முதலில், பைக் மீது மோதி உள்ளது. தொடர்ந்து, லாரியின் மீதும் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில், 11 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் சரியாக போடப்படாத சாலைகளின் நிலை மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால், சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த விபத்தில், எண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில், 31 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.