பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கி சூடு.. 2 மாணவர்கள் பலி.. அமெரிக்காவில் தொடரும் சம்பவம்!

 

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கும் நான்கு வளாகங்களில் இதுவும் ஒன்றாகும் . இந்த பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நேற்று காலை 6 மணி அளவில் திடீர் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என தெரியவில்லை. மேலும் 2 மரணங்களும் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.