டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்.. அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பால் ஏற்பட்ட சோகம்!

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் அழகு பராமரிப்புக்கான அறுவை சிகிச்சையால், அடுத்தடுத்து நேரிட்ட 4 மாரடைப்புகளில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய காலங்களில் ஒருவர் மீது ஊடக வெளிச்சம் படுவதும், அல்லது ஊடக வெளிச்சம் பட்டவர்களை சந்திப்பதும் அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்து விடாது. ஆனால் தற்போதுள்ள டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி பலர் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக செல்போன்களில், பல்வேறுவிதமான ஆப்கள் இதற்கு உதவுபவையாக இருக்கின்றன.

அந்த வகையில் பிட்னஸ் ஆர்வலரான பிரேசிலைச் சேர்ந்த 29 வயதான லுவானா ஆன்ட்ரே ஒருவர். தன்னுடைய அழகிற்காக உடற்பயிற்சி மற்றும் உணவிலும் தீவிர கவனம் செலுத்தினார். இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடருகின்றனர். தன்னுடைய பிட்னஸுக்காக இவர் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது முழங்காலில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது, ‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதற்காக பிரேசிலின் பிரபல தனியார் மருத்துவமனையில் லுவானா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுமார் இரண்டரை மணி நேரம் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவர் சுயநினைவுக்கு திரும்பாத நிலையில் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையின்போது அவருக்கு, 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதில், சிகிச்சை பலனின்றி லுவானா ஆன்ட்ரே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய இறப்பை, தாங்கிங்கொள்ள முடியாத பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.