திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்

 

அமெரிக்காவில் உள்ள மளிகை கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்கள் மீது 44 வயதான நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், ஆர்கன்சாஸின் நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

“இது மிகவும் சோகமான நிகழ்வு, எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன” என மாநில காவல்துறை இயக்குநரும், பொதுபாதுகாப்பு செயலாளருமான கர்னல் மைக் ஹாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.