கொரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை... சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

 

கொரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறியது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொது மக்களுக்கு செலுத்தப்பட்ட பின் தான், பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

கொரோனா பரவியதற்கான காரணம் குறித்து, உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக, சீனாவின் உகான் நகருக்கு சென்ற உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் பல முறை விசாரணை நடத்தினர். எனினும், கொரோனா தொற்றின் உண்மையான தரவுகளை, அந்த அமைப்பிடம் சீனா இதுவரை வழங்கவில்லை. உலக சுகாதார அமைப்பு பல முறை வலியுறுத்தியும், சீனா போக்கு காட்டி வருகிறது.

இந்நிலையில், கொரோ னா  குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில், சீனா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறுகையில், சீன நோய் கட்டுப்பாடு மையம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள், 2020-ல் உகானில் உள்ள ஹுவானன் சந்தையில் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் தொடர்பானவை. இவற்றை, பல விஞ்ஞானிகள் பதிவிறக்கம் செய்து பகுப்பாய்வு செய்தனர்.  இந்தத் தரவுகளை நாங்கள் கேட்ட போது, சீனா தர மறுக்கிறது. இதை ஏற்க முடியாது. 

கொரோனா பரவல் குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில் சீனா வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போது தான், கொரோனா தொற்று பரவியதற்கான உண்மையான காரணத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளார்.