அபுதாபியில் கொரோனாவை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்.. எச்சரிக்கை மணியடித்த உலக சுகாதார நிறுவனம்! பீதியில் மக்கள்!

 

அபுதாபியில் கொரோனாவை மிஞ்சக் கூடிய மெர்ஸ் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.02 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், அடுத்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் ஒருவர் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று மெர்ஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண கொரோனா தொற்றை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உலக சுகாதார நிறுவனததின் அதிகாரிகள் அபுதாபி விரைந்து பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். அவருடன் தொடர்பில் இருந்த 108 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

மெர்ஸ் கோவிட் வைரஸ் என்பது மரபணு சார்ந்த வைரஸாக கருதப்படுகிறது. இது விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும். ஒட்டகங்களில் இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டதாக 2,605 பேர் கண்டறியப்பட்டு அவர்களில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து அவர் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளது.