மற்ற பெண்களை பார்த்த காதலன்.. வெறிநாய் ஊசியால் கண்ணில் குத்திய காதலி!

 

அமெரிக்காவில் காதலன் மற்ற பெண்களை பார்க்கிறார் என்ற கோபத்தில் காதலி வெறி நாய்களுக்கு போடக்கூடிய ஊசியால் காதலனின் கண்களில் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்த்ரா ஜிமினெஸ் (44). இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அவரது காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்து வந்ததாக தெரிகிறது.

காதலன் இந்த போக்கை தொடர்ந்து மாற்றிக் கொள்ளாமல் இருக்கவே ஆத்திரமடைந்த ஜிமினெஸ், தங்களின் வளர்ப்பு நாய்க்கு போடுவதற்காக வாங்கி வைத்து இருந்த வெறிநாய்க்கடி ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து வலியுடன் காதலன் போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார், அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் படுத்து தூங்கி கொண்டு இருந்த தோழி ஜிமினெஸையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜிமினெஸிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, காதலனை தான் தாக்கவில்லை என்றும், அவர் தன்னை தானே குத்திக் காயப்படுத்தி கொண்டதாகவும், அதனால் தாக்குதல் குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன் எனவும் ஜிமினெஸ் தெரிவித்துள்ளார்.