ரஷ்யாவில் மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு.. 17 பேர் பலியான சோகம்!

 

ரஷ்யாவில் மதவழிபாட்டு தலங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் சுட்டு கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று இரவு பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மதபோதகரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர், மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்தினர்.

அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் போலீசார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்த நகரங்களுக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர். பயங்கரவாதிகள் - பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசைநிகழ்ச்சி நடந்த அரங்கில் புகுந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.