நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 29 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலி!

 

நைஜரில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசுப் படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஜூலை மாதம் அதிபர் முகமது பாசும் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அதுமுதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்டை நாடான மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் ராணுவத்தினர் நேற்று இரவு தீவிர ரோந்துப் பணியை  மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை எதிர்பார்த்து அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்,  ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தங்களை நெருங்கியபோது அதன் மீது வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்துச் சிதறி, முற்றிலுமாக உருக்குலைந்து நாசமானது. அதில் இருந்த 29 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.  இது ஆப்பிரிக்க நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.