ஆப்கானிஸ்தானில் பயங்கரம்! தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் ஆளுநர் படுகொலை!

 

ஆப்கானிஸ்தானில் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நடந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி தலீபான்கள் நியமித்த ஆளுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பல அரசியல் மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தின் ஆளுநராக முகமது தாவூத் முசாமில் என்பவர் தலீபான்களால் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று காலை 2-வது தளத்தில் இருந்த ஆளுநர் அலுவலகத்தில் முகமது தாவூத் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகளை உடலில் கட்டு கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அதனை வெடிக்க செய்து உள்ளார்.

இந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி பால்க் ஆளுநர் முகமது தாவூத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பொதுமக்களில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, ராணுவத்தினர் 3 பேர் மற்றும் குடிமக்களில் ஒருவர் என 4 பேர் காயமடைந்தனர். இதனை பால்க் பாதுகாப்பு துறைக்கு நியமிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் முகமது ஆசிப் வசீரி உறுதிப்படுத்தி உள்ளார். 

அமெரிக்க படைகள் வாபசுக்கு பின்னர் தலீபான்கள் கைப்படியில் நாடு சென்றதும், ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் அந்நாட்டில் பொதுமக்கள் மற்றும் தலீபான் உறுப்பினர்கள் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.