வரி உயர்வு.. கென்யாவில் வெடித்த மக்கள் போராட்டம்.. 39 பேர் பலி, 360 பேர் காயம்

 

கென்யாவில் வரி உயர்வை கண்டித்து மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தற்போது வரை 39 உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.

கடந்த மாதம் ஜூன் 18 முதல் ஜூலை 1-ம் தேதி வரையிலான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 32 பேர் மாயமாகி உள்ளதாகவும், 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது உள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாக வில்லியம் ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு அரசு காரணம் இல்லை என்றும், இதுகுறித்து முறையான விசாரணை நடப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளத்தில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது. பாதுகாப்பு படைகளை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது என கென்ய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.