கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி.. ஈக்வடாரில் அதிர்ச்சி!

 

ஈக்வடாரில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் கயாக்யூலி மாகாணம் குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமுள்ள ஈக்குவடாரில் அவ்வப்போது கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேவேளை பொதுமக்கள் மீதும் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.