சிலியில் வரலாறு காணாத காட்டுத் தீ.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

 

சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறி உள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின.

இந்தநிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது. எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டார். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.