நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

 

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் அசாம், அந்தமான் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.56 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தை நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும்  கருதப்படுகிறது.  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு முன் வெல்லிங்டன் அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.