வனுவாடு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. பீதியில் மக்கள்!

 

வனுவாடு நாட்டின் கடல் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 7.1 புள்ளி கொண்ட, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வனுவாடு என்பது தென் பசிபிக் பெருங்கடலில் 1,300 கிலோமீட்டர் நீளமுள்ள சுமார் 80 தீவுகளால் ஆன குட்டி நாடாகும். இந்த நாடு, நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியாக உள்ளது. இதன் தெற்கு பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாகக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.