மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

 

மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது.

வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கே 44 மைல் தொலைவில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதையறிந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளதாக மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது. மேலும், 329 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.