மனைவி மற்றும் 2 மகன்களை சுட்டு கொன்றுவிட்டு காவலர் தற்கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 

அமெரிக்காவில் போலீஸ் சார்ஜெண்ட் ஒருவர், தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ராக்லேண்ட் கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போலீஸ் சார்ஜெண்ட் தனது குடும்பத்துடன் இறந்து கிடப்பதாக கிளார்க்ஸ்டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, குறித்த போலீஸ் அதிகாரி பிராங்க்ஸ்வில்லே காவல்துறை சார்ஜெண்ட் வாட்ஸன் மோர்கன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் வாட்சன் தன் மனைவி ஓர்னெலா மோர்கன் (43) மற்றும் 10, 12 வயதுடைய இரண்டு மகன்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் நடந்த வீட்டில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாருக்கும் இதில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.