ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. பாகிஸ்தானில் அதிசய சம்பவம்

 

பாகிஸ்தானில் பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (27) கடந்த 18-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் 19-ம் தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்குள் 6 குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தைகளில் 4 ஆண், 2 பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீனத்தின் முதல் பிரசவம் இது என்றும், மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுத்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் இது இயற்கையான பிரசவம் இல்லை. பிரசவத்தின் போது சிக்கல்கள் இருந்ததால், மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுத்தனர்.

ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பர்சானா தெரிவித்தார். இருப்பினும் குழந்தைகளை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக மருத்துவர்கள்  தகவல் தெரிவித்துள்ளனர்.