நள்ளிரவில் திடீரென குலுங்கிய பாகிஸ்தான்.. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

 

பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே மிக மோசமானதாகும்.

மேலும், 2024-ம் ஆண்டு தொடங்கிய முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஜனவரி 23-ம் தேதி சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி - என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் - சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

அதில், “ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் 17-02-2024 அன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது” என குறிப்பிட்டுள்ளது.