2 அடி நீள வளர்ப்பு பல்லி கடித்ததில் உயிரிழந்த உரிமையாளர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 

அமெரிக்காவில் 2 அடி வளர்ப்பு பல்லி கடித்ததில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வளர கூடியவை கிலா மான்ஸ்டர்ஸ் வகையை சேர்ந்த பல்லிகள், 2 அடி வரை வளர கூடியது. இந்த வகை பல்லிகள் அதன் மேற்புற தோலின் வடிவான வண்ணம், அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் வார்டு (52) என்பவர் 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பல்லிகளில் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் அவரை 4 நிமிடங்கள் வரை கடித்துள்ளது. உடனேயே அவருக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கின. தொடர்ந்து பல முறை வாந்தி எடுத்திருக்கிறார். சுவாசமும் நின்றுள்ளது.

இதனால், அவர் 2 மணிநேரம் வரை சுயநினைவற்று போயிருக்கிறார். உடனடியாக அவருடைய காதலி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், வார்டின் காதலி பயந்து போய் அந்த 2 பல்லிகளையும் விலங்குகள் நல கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்.

வார்டின் வீட்டில் இருந்த வெவ்வேறு இன 26 சிலந்தி பூச்சிகளும் விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பல்லிகள் விஷத்தன்மை வாய்ந்த ஊர்வன வகையை சேர்ந்தவை. இவற்றின் கடியானது, வலியை அதிகரிக்க செய்ய கூடியவை. ஆனால், கொல்ல கூடிய அளவுக்கு ஆபத்தில்லை.  

இதற்கு முன் 1930-ம் ஆண்டு ஒருவர் இந்த வகை பல்லி கடித்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். அதற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது என அரிசோனா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டேல் டிநார்டோ கூறியுள்ளார்.