கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை.. உச்சக்கட்ட பரபரப்பு!

 

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பான காலிஸ்தான், 1984-ம் ஆண்டே இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான நம்பகமான தகவல் கிடைத்து இருப்பதாக ட்ரூடோ கூறினார். இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா - கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தான் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏவால் அதிகம் தேடப்படும் நபர் பட்டியலில் உள்ளவரும் சர்வதேச அளவில் தேடப்படக்கூடியவாராகவும் சுக்துல் சிங் உள்ளவர்.

காலிஸ்தான் ஆதரவாளராகவும் தீவிரவாதியாகவும் அறியப்படும் இவர் கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சுக்துல் ஷிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு பஞ்சாப்பில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவிற்கு தப்பி சென்றார். தேசிய புலனாய்வு முகமை நேற்று வெளியிட்ட பட்டியலில் உள்ள 43 கேங்ஸ்டர்களில் இடம் பெற்றிருந்த பயங்கரவாதி அர்ஷ்தீப் டால்லாவிடம் நெருக்கமானவராக இந்த சுக்தூல் சிங் அறியப்படுகிறார்.