கண்ணாமூச்சி விளையாடிய 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!!

 

அமெரிக்காவில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை முதியவர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் டேவிட் டாய்ல் என்ற 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடி உள்ளனர். அப்போது, வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி, முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார்.

இதுகுறித்து லூசியானா காவல்துறை கூறுகையில், “14 வயது சிறுமி பக்கத்து வீட்டுக்காரரால் தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். லூசியானா-டெக்சாஸ் எல்லைக்கு அருகில் உள்ள ஸ்டார்க்ஸில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 7-ம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பல குழந்தைகள் அப்பகுதியில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். முதியவரின் பகுதியில் சிறுவர்கள் விளையாடிய நிலையில் வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி துப்பாக்கி எடுத்து வந்த நிலையில் அவர்கள் அங்கு இருந்து ஓட தொடங்கினர்.

பின்னர் அவர்களைச் சுடத் தொடங்கினார். அப்போது சிறுமி தலையின் பின் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர். இதையடுத்து முதியவரை போலீசார் கைது செய்தனர். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி சுட்டுக் கொல்லபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.