பெண் விஞ்ஞானியை மர்ம இடத்திற்கு அழைத்து சென்ற ஆக்டோபஸ்.. வைரல் வீடியோ!

 

கடலில் மனிதரை கண்டதும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் ஆக்டோபஸ் செய்த செயல் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆழ்கடலில் வசித்து வரும் பல அதிசய உயிரினங்கள் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்குள் செல்வதுண்டு. அப்படி பெண் விஞ்ஞானி ஒருவர் கடலின் ஆழத்தில் சென்றபோது, ஆச்சரியம் தரும் விசயம் ஒன்று நடந்து உள்ளது.  அவர், நீந்தி செல்வதற்கேற்ற ஆடை மற்றும் பிராணவாயு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன், கைகள் மற்றும் கால்களை மூடியபடி சென்றுள்ளார்.

அவர் கடலின் ஆழத்தில் இருந்தபோது, ஆக்டோபஸ் எனப்படும் உயிரினம் அவரை சுற்றி சுற்றி வந்துள்ளது.  இந்த ஆக்டோபசுக்கு 8 கரங்கள் உண்டு. அவற்றில் விஷ சுரப்பிகள் இருக்கும். இரையை எளிதில் கொல்ல அவற்றை பயன்படுத்தும். ஆழ்கடலில் அவை வசிக்க கூடியவை.  

இந்நிலையில், அந்த ஆக்டோபஸ் இந்த பெண்ணின் கையை பிடித்து, இழுத்துள்ளது. பின்னர் அது ஒரு பகுதியை நோக்கி கடலுக்குள் முன்னேறி சென்றது. அவரும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் முன்னே சென்ற ஆக்டோபஸ், அந்த பெண் பின்னால் வருகிறாரா? என்பதற்காக சற்று நின்று திரும்பி கவனிக்கிறது. அவர் வருவது உறுதியானதும் மீண்டும் செல்கிறது.

இறுதியாக, 2 உலோக கம்பிகளின் நடுவே தரையில் கல் பொருத்தப்பட்ட ஒரு பகுதிக்கு செல்கிறது.  அதன் பின்புறம் சென்று காட்டுகிறது. அந்த கல்லின் மையத்தில் ஆண் ஒருவர் கையில் நாய் குட்டியுடன் இருக்கும் படம் ஒன்று காட்சியளிக்கிறது.

எனினும், மனிதர் ஒருவரை பார்த்ததும் அவரை போன்ற உருவம் கொண்ட ஒருவரின் புகைப்படம் இருந்த பகுதிக்கு, அந்த பெண்ணின் கையை பிடித்து, ஆக்டோபஸ் இழுத்து சென்று அடையாளம் காட்டியது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.