பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா.. போர் மூளும் அபாயம்

 

தென்கொரோயாவை அச்சுறுத்துவம் வகையில் வடகொரியா திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. அணு ஆயுத சோதனை மேற்கொண்டு உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் வடகொரியா தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது.

வடகொரியா வீசிய 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தாக்குதலை அடுத்து தீவுப்பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ள தென்கொரியா, அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.