4 இளம் பிள்ளைகளுடன் தீக்குளித்த தாயார்.. சிக்கிய கடிதத்தால் அம்பலமான பின்னணி.. அமெரிக்காவில் அதிர்ச்சி!

 

அமெரிக்காவில் தனது 4 பிள்ளைகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தை சேர்ந்தவர் பெர்னாடின் ப்ரூஸ்னர் (39). இவர், கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 20-ம் தேதி இவரது குடியிருப்பு தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில், தமது 4 பிள்ளைகளுடன் ஆசிரியரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து செயின்ட் லூயிஸ் மாவட்ட போலீசார் முன்னெடுத்த விசாரணையில், அது ஒரு தற்கொலை மற்றும் கொலை சம்பவம் என்று உறுதியாகியுள்ளது. ஆசிரியர் ப்ரூஸ்னரே தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகளால் நம்பப்படுகிறது. மேலும் ஒரு கடிதம் போலீசாரிடம் கிடைத்து உள்ளது.

அந்த கடிதத்தில, தமது நான்கு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு அவர் வந்துள்ளதும் அம்பலமானது. பிப்ரவரி 19ம் தேதி தமது நான்கு மகள்களுடன் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பகிர்ந்துள்ள ப்ரூஸ்னர், தமது பிள்ளைகளின் தாயாராக இருப்பதே ஒருவகை ஆசீர்வாதம் தான் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2017-ல் டேவிட் என்பவருடன் ப்ரூஸ்னர் விவாகரத்து பெற்றிருந்தார். இருவரும் இணைந்தே தங்கள் பிள்ளைகளை வளர்க்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் வேறு பகுதிக்கு குடியிருப்பை மாற்ற டேவிட் மறுத்துள்ளதை அடுத்து, இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்தது.

மட்டுமின்றி, ஆசிரியர் ப்ரூஸ்னர் மிக இக்கட்டான சூழலில் இருப்பதாகவே அவரது நண்பர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். அவரது முன்னாள் கணவர் இருவருக்கு எதிராகவும், ஒரு காதலருக்கு எதிராகவும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ப்ரூஸ்னர் எதிர்கொண்டு வந்துள்ளார்.

சட்ட போராட்டங்களும் மன உளைச்சலும் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்றே உறவினர்கள் நம்புகின்றனர். ஆண்டுக்கு 60,000 டாலர் சம்பளம் பெற்றிருந்தாலும், பொருளாதார நிலையில் அவர் போராடி வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. மேலும், கடந்த 2013ல் மிசூரி மாகாணத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர் ப்ரூஸ்னர் என்பது குறிப்பிடத்தக்கது.