80-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்.. அதிகாலை வரை குலுங்கிய தைவான்.. மக்கள் பீதி!

 

தைவானில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தைவானில் கடந்த 3-ம் தேதி 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் மலைப்பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஹுவாலியன் நகரின் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 5.08 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகரான தைபேயிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) இதன் அளவை 5.5 ரிக்டர் என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழத்தை 8.9 கிலோமீட்டர் என்றும் கணக்கிட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி  அடைந்தனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.3 என்ற அளவில் ஏற்ப்ட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.