பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் திடீர் மரணம்... குதிரை சவாரி செய்த போது நேர்ந்த விபரீதம்!!

 

குதிரை சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் சியன்னா வெயிர் (23). மாடல் அழகியான இவர், கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டது, இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவில் வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டார். 

அப்போது, அவரது குதிரை திடீரென சரிந்து, விழுந்து உள்ளது. இதில் சியன்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு, வெஸ்ட்மீட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உயிர் காக்கும் சிகிச்சையை எடுத்து விடும்படி அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் உயிரிழந்து உள்ளார். ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியல் பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை படித்து உள்ள அவர், 3 வயது இருக்கும்போது, குதிரை சவாரி செய்ய தொடங்கினார். 

இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அவர், அந்நாட்டில் தனது பேஷன் தொழில் மற்றும் சமூக நெட்வொர்க்கை தொடர போகிறேன் என உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார். எனது சகோதரி, உறவினர்களுடன் அதிக நேரம் செலவிட போகிறேன் என்றும் கூறினார். 

இந்நிலையில், அவரது சோக மரணம் நடந்து உள்ளது. அவரது மறைவுக்கு தோழிகள், குடும்பத்தினர் மற்றும் மாடல் தொழிலில் உள்ள நண்பர்கள் சமூக ஊடகம் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.