நடுவானில் விமான கழிவறையை பூட்டி கொண்டு தற்கொலை முயற்சி.. பயணியின் செயலால் அதிர்ச்சி!

 

தாய்லாந்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவர் கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளுது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து லண்டன் நகர் நோக்கி பி.ஆர்.67 என்ற எண் கொண்ட தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் கழிவறைக்கு சென்று உட்புறம் கதவை பூட்டி கொண்டு வெகுநேரம் திரும்பி வரவேயில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த ஊழியர் ஒருவர் சென்று என்னவென்று பார்த்துள்ளார். அப்போது, காயங்களுடன் அந்த பயணி கிடந்துள்ளார்.  உடனடியாக அந்த ஊழியர், விமானத்தில் இருந்த மருத்துவர் சேர்ந்து அந்த பயணிக்கு முதலுதவி செய்தனர்.

அதன்பின் அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்று இறங்கியது. அந்நபர் கழிவறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. அந்த பயணி பின்னர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருடைய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.