லிபியா நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. 61 அகதிகள் பரிதாப பலி!

 

லிபியாவில் படகு ஒன்று கவிழந்த விபத்தில் 61 அகதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதி உலகின் ஆபத்தான புலம்பெயர்வு வழிகளில் ஒன்றாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர். அந்த படகில் பெண்கள், குழந்தைகள் என பலர் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாமல் தவித்தனர். சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர். எனினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

இத்தாலி நாட்டின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்வதற்கான முக்கிய புறப்படும் இடங்களாக லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐநா அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.

ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆண்டு இறந்துள்ளனர் அல்லது தொலைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலகின் மற்ற பகுதிகளில் இதைவிட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.