கத்திக்குத்து தாக்குதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கனடாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பார்ஹெவன் பகுதியில் வசித்து வந்த தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேற்று இரவு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தர்ஷினி, அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் என 6 பேர் உயிரிழந்தனர். தர்ஷினியின் கணவர் படுகாயமடைந்தார். 

இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இலங்கையை சேர்ந்த டி சொய்சா என்ற 19 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் டி சொய்சா, கொல்லப்பட்ட தர்ஷினியின் வீட்டியில் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை, இந்த படுகொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்கள் முன்னர் தான் அந்த இளைஞரின் 19வது பிறந்தநாளை அந்த குடும்பத்தினர் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.