19-வது மாடியில் இருந்து விழுந்து கேரள இளம்பெண் பலி.. ஐக்கிய அரபு எமிரேட்சில் சோகம்!

 

ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷனிபா பாபு (37). இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அவர் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாருக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணை முடிவில் தான், ஷனிபா பாபு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்மான் பகுதியில் ஒரு கட்டிடத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் குந்தாறை பகுதியை சேர்ந்த ரூபன் பவுலஸ் (17) என்ற ப்ளஸ்-2 மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.