லித்தியம் - அயன் பேட்டரி உருவாக்கிய ஜான் குட்எனஃப் காலமானார்..!

 

லித்தியம் - அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான் குட்எனஃப் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100.

லித்தியம் - அயன் பேட்டரி கண்டுபிடிப்பதற்கு முன்பு நிக்கல் - ஹைட்ரஜன் பேட்டரி தான் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது. இந்த பேட்டரிகள் நீண்ட நாட்களுக்கு வராதது என்பதால், ஸ்டான்லி விட்டிங்கம் என்பவர் லித்தியம் பேட்டரியை உருவாக்கினார். அந்த பேட்டரி பாதுகாப்பான முறையில் இல்லை என்பதாலும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்தது. 

அந்த குறையை சரிசெய்து, மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் வகையில், லித்தியம் - அயன் பேட்டரியை சக விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உருவாக்கினார் ஜான் குட்எனஃப். பிரிட்டனின் ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் சேர்ந்து லித்தியம் - அயன் பேட்டரிகளை பாதுகாப்பாக உருவாக்கியதற்காக கடந்த 2019ம் ஆண்டு ஜான் குட்எனஃப்-க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அடுத்த மாதம் 25ம் தேதி, அவர் தனது 101வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அறிவியல் உலகத்திற்கு மட்டுமல்லாது, தொழில்துறை உலகத்திற்கே பேரிழப்பாகும். நாம் இன்று பயன்படுத்தி வரும் மொபைல் போன் தொடங்கி லேப்டாப், ஃபேஸ்மேக்கர், மின் வாகனங்கள் என பலவற்றிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

1922-ல் ஜெர்மனியின் ஜெனாவில் பிறந்தவர் ஜான் குட்எனஃப். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் முடித்த இவர், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வு சார்ந்து தனது பணிகளை தொடங்கினார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியல் ஆய்வகத்தின் தலைவராக இருந்தபோது தான் லித்தியன்-அயன் பேட்டரி உருவாக்கத்தில் ஈடுபட்டார். 1986-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.