காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

 

காசாவில் இல்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 800 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.  உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மற்றும் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு கூறி வருகிறார். அதேசமயம், போரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.