பெற்ற மகளைக் கொன்ற இந்திய வம்சாவளி பெண்.. கொலை செய்யப்பட்டது எப்படி?

 

 இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ரவுலி ரெஜிஸ் நகரத்தில் உள்ள வீடொன்றிற்கு, இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 4-ம் தேதி, இரவு 12.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ஷே கேங் (10) என்கிற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள்.

இதையடுத்து மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், ஷே கேங் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (33) கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்ற தகவலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். குழந்தை ஷே கேங்கின் மார்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதாவது ஷே கேங் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளாள்.

இதற்கிடையில், ஜாஸ்மின் வால்வர்ஹாம்ப்டன் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை, எதற்காக குழந்தையை அவர் கொலை செய்தார் என்பதும் தெரியவரவில்லை. மீண்டும், ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.