அமெரிக்காவில் இந்திய மாணவர் கடத்தல்.. பணம் தராவிட்டால் சிறுநீரகத்தை விற்றுவிடுவோம்.. போதைப்பொருள் கும்பல் மிரட்டல்

 

அமெரிக்காவில் இந்திய மாணவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் (25). இவர் என்ஜினீயரிங் மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதியில் இருந்து அப்துல், ஐதராபாத்தில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் பதற்றமடைந்த அப்துலின் தந்தை முகமது சலீம், அமெரிக்காவில் அப்துலுடன் தங்கியிருக்கும் அவருடைய நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் 7-ம் தேதி முதல் அப்துலை காணவில்லை என்றும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினர். 

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அப்துலின் தந்தை சலீம் செல்போனுக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவன் என்றும், அப்துலை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் அந்த நபர் அப்துலை விடுவிக்க வேண்டுமென்றால் 1,200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கொடுக்க வேண்டும், பணம் தராவிட்டால் அப்துலின் சிறுநீரகத்தை விற்றுவிடுவோம் என மிரட்டினார். அதே நபர் மீண்டும் நேற்று முன்தினம் மீண்டும் சலீமை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தங்கள் மகனைக் கண்டுபிடித்து பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்துலின் பெற்றோர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சலீம் கடிதம் எழுதியுள்ளார்.