அமெரிக்காவில் மூளைசாவு அடைந்து உயிரிழந்த இந்திய மாணவர்.. கல்வி கற்க சென்ற இடத்தில் சோகம்!

 

அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவருக்கு மூளையில் ரத்தக்கட்டி ஒன்று இருப்பது தெரியவந்த நிலையில், சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் துளசி ராஜன். இவர், ஓய்வு பெற்ற ஆர்டிஓ அதிகாரி. இவரது மூத்த மகன் ருத்விக் ராஜன் (30). இவர், உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தார்.

இம்மாதம், அதாவது பிப்ரவரி 16-ம் தேதி, தன் நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்த ருத்விக், திடீரென நிலைகுலைந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் இரத்தக்கட்டி ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளார்கள். அவரது உடலின் வலது பக்கம் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்கள்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ருத்விக்கின் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மாறாக நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ருத்விக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். நேற்று அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்வி கற்கச் சென்ற ருத்விக், பட்டப்படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.