விமானத்திலேயே உயிரிழந்த இந்திய இளம்பெண்.. இந்தியாவிற்கு புறப்படும் முன் நிகழ்ந்த சோகம்!

 

ஆஸ்திரேலியாவில், நீண்ட நாட்கள் கழித்து பெற்றோரை பார்க்க நினைத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் விமானம் புறப்படும்முன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார். சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த மன்ப்ரீத் கவுர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க உற்சாகமாக இருந்தார்.

விமானத்தில் ஏறும் முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படும் கவுர், எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானத்தில் ஏறினார். ஆனால், தனது சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது, ​​மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் கடந்த மாதம் ஜூன் 20-ம் தேதி நடந்த நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விமானம் மெல்போர்னில் போர்டிங் கேட்டில் இருந்தபோது, ​​​​கேபின் குழுவினர் மற்றும் அவசர சேவைகள் அவருக்கு உதவ விரைந்தன. ஆனால், அவர் விழுந்த அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் காசநோய் என்று நம்பப்படுகிறது, இது முதன்மையாக நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

கவுர் சமையல்கலை படிக்கும் அதேநேரத்தில், ஆஸ்திரேலியா போஸ்டில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 2020-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற கவுர், முதல் முறையாக தனது பெற்றோரைப் பார்க்க இந்தியாவுக்கு பயணப்பட்ட நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், கவுரின் குடும்பத்திற்கு உதவ GoFundMe பக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கவுரின் நண்பர்கள் அதில் நிதி திரட்டி வருகின்றனர்.