அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன்.. ஜோ பைடன் திட்டவட்டம்

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) களமிறங்கியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். அதன்படி கடந்த மாதம் இருவரும் நேரடி விவாத  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் ஜோ பைடன் சிறப்பாக செயல்படவில்லை. அவர் பல இடங்களில் திணறினார்.  இதனால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஜோ பைடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜோ பைடனை விட துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்  இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது நிதி திரட்டும் மின்னஞ்சலில் கூறியதாவது, நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை, நான் இறுதிவரை இந்த போட்டியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறப் போகிறோம். நவம்பரில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உதவுங்கள். நீங்கள் எத்தனை முறை வீழ்த்தப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

நீங்கள் எவ்வளவு விரைவாக எழுந்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நாடாக, நாம் வீழ்த்தப்படும்போது, மீண்டும் எழுவோம். நாம் கடினமாக உழைக்கிறோம். அதைத்தான் நான் செய்யப் போகிறேன். 2020-ம் ஆண்டு டிரம்பை தோற்க்கடித்தோம். 2024- ஆண்டில் அவரை மீண்டும் தோற்க்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாக இருக்காது. உங்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்ய எனக்கு நீங்கள் பின்னால் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது. அதிபர் தேர்தலில் இருந்து விலகுவது பற்றி ஜோபைடன் பரிசீலிக்கவில்லை என்றார்.