மடகாஸ்கரை புரட்டி போட்ட கனமழை.. வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் பலி!

 

மடகாஸ்கரில் கனமழையால் 14 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தீவு நாடு மடகாஸ்கர். இங்குள்ள கமனே பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதில் அங்குள்ள 9 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.

இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் கமனே நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு 14 பேர் பலியாகினர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மற்றும் இடர் நிர்வகிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெமேன் சூறாவளி, புதன்கிழமை காலை மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் கரையைக் கடந்து, மணிக்கு சராசரியாக 150 கிமீ வேகத்தில் காற்று வீசியதோடு, மணிக்கு 210 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனத்த மழையையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக 9 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.