25 மாணவர்களுக்கு உணவில் விஷம்.. ஒரு மாணவர் உயிரிழப்பு.. ஆசிரியைக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

 

சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் வாங் யுன் (40). இவர் 2019 காலகட்டத்தில் மெங்மெங் என்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து உள்ளார். அப்போது மாணவர்களை நிர்வகிப்பது தொடர்பாக சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாங் யுன் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் சோடியம் நைட்ரேட் விஷத்தை கலந்து உள்ளார்.

இதை அறியாத மாணவர்கள், அந்த உணவைச் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருக்கினர். அதைத் தொடர்ந்து, 25 மாணவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 24 மாணவர்கள் சில நாள்களிலேயே குணமடைந்தனர்.

அதேநேரம் வாங் யுன் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஒரு மாணவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார், “குற்றவாளியான வாங் யுன் பள்ளியில் மாணவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர், தன் கணவருக்கும் அதே போன்று விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்று இருக்கிறார்.” என தெரிவித்தனர்.

ஆனால், அவர் லேசான பாதிப்புகளுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த இரண்டு வழக்குகளிலும், பழிவாங்கும் நோக்கில் குற்றவாளி செயல்பட்டிருப்பது நிரூபணம் ஆனதால், வாங் யுன்-க்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.