பிரான்சில் இருந்து இங்கிலாந்து நுழைய முயன்ற 5 பேர்.. கடலில் மூழ்கி பரிதாப பலி

 

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சி எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையிலும் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். பிரான்ஸ் - இங்கிலாந்து இடையேயான கடல் பகுதியில் இங்கிலீஷ் சேனல் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய அகதிகள் முயன்றனர். 

அப்போது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரு குழந்தை உள்பட 5 அகதிகளும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் வடக்கு பிரான்சின் விம்மரெக்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கின. இதையடுத்து, உடல்களை கைப்பற்றிய பிரான்ஸ் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.