நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து.. 12 தொழிலாளர்கள் பலி

 

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலுசிஸ்தான் மாகாணத்தின் சுரங்கத் தலைமை ஆய்வாளர் அப்துல் கானி பலோச் கூறுகையில், நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் மீட்கப்பட்டதாக தெரவித்தார். மேலும், மீட்புப் பணி முடிந்துவிட்டது என்று கூறினார்.

இரவோடு இரவாக மீத்தேன் வாயு வெடித்தபோது சுரங்கத்திற்குள் 20 சுரங்கத் தொழிலாளர்கள் இருந்ததாக அவர் கூறினார். மீட்புக் குழுவினர் 12 பேரின் உடல்களை மீட்டதாகவும், உயிர் பிழைத்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.